ரயில் பெட்டியில் எலி சுற்றி திரிந்த விடியோவை பயனர் ஒருவர் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
மார்ச் 19, எக்ஸ் வலைதளத்தில் ஜாஸ்மிதா பதி என்பவர் இரண்டு விடியோக்களை பகிர்ந்துள்ளார். அதில் ஒன்றில் ரயில் பெட்டியில் இருக்கைகளுக்கு கீழே எலி ஒன்று சுற்றித் திரிகிறது.
இரண்டாவது விடியோவில் தூசிப்படிந்த கண்ணாடி மற்றும் பெட்டியின் மேற்புறம் காட்டப்பட்டுள்ளது.
இவற்றை பகிர்ந்த ஜாஸ்மிதா, “ரயிலின் தூய்மையற்ற நிலை மற்றும் எலிகள் சுற்றித் திரிவதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு எட்டப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவில் ரயில் அமைச்சகத்தின் பக்கங்களை டேக் செய்துள்ளார்.
அடுத்த மூன்று நிமிடங்களில் பயணிகளுக்கு உதவி அளிக்கும் அதிகாரபூர்வ ரயில்வே சேவா பக்கம் பதில் அளித்துள்ளது. அதில் “உங்களின் பிஎன்ஆர் (பயணச்சீட்டு) எண் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை பகிர்ந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்” எனக் கேட்டு கொண்டுள்ளது.
பயணிகளின் புகார்களுக்கு ரயில்வே சேவா விரைவில் பதிலளித்து வருகிறது.
பிப்ரவரியில் தனது சகோதரிக்கு உதவி கேட்டு பெண் ஒருவர் பதிவிட்டிருந்தார். முன்பதிவு செய்த அவரது இருக்கையில் வேறு ஒருவர் அமர்ந்து கொண்டு இவருக்கு இருக்கையை அளிக்க மறுத்துள்ளார். உடனடியாக ரயில்வே சேவா அதற்கு பதிலளித்ததோடு அதிகாரிகளால் அந்த பிரச்னையும் சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.