உத்தரப் பிரதேசத்தில் இரண்டு சிறுவர்கள் கொடூரமாகக் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. குற்றவாளி அடுத்த சிலமணி நேரங்களிலேயே காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உ.பி.யின் படவுன் பகுதியில் சாய்பாபா காலனியில் சஜித் கான்(22) என்பவர் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். கடைக்கு எதிரே உள்ள வீட்டில் மூன்று குழந்தைகளுடன் ஒரு குடும்பம் வசித்து வந்தது.
இதனிடையே, கடையின் எதிரேயுள்ள வீட்டில் நுழைந்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த ஆயுஷ்(12), ஆஹான்(8) யுவராஜ் (10) ஆகிய மூன்று சிறுவர்களையும் சஜித் கான் சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த 2 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு சிறுவன் மட்டும் படுகாயங்களுடன் உயிர்த் தப்பினார். அவனை அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் சலூன் கடைக்காரருக்கும் சிறுவர்களின் தந்தைக்கும் ஏற்கனவே முன்பகை இருந்து தெரிய வந்தது.
தப்பியோடிய சஜித் கானை போலீஸார் அடுத்த சில மணி நேரங்களிலேயே மடக்கி பிடித்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சஜித் கான் உயிரிழந்தார்.
இதையடுத்து, சலூன் கடையை சிறுவர்களின் குடும்பத்தினர் அடித்து உடைத்தனர். இறந்த சிறுவர்களின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.