தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தற்போது கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக வியாழக்கிழமை மாலை தொடங்கி அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டு வந்த அமலாக்கத்துறையினர், தற்போது அவரை விசாரணைக்கு உட்படுத்த கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு வேண்டி அரவிந்த் கேஜரிவால் தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு வியாழக்கிழமை நிராகரிக்கப்பட்டது. அதனையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆட்சியில் உள்ளபோதே முதல்வரை கைது செய்வது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. அவர் தன் பொறுப்பில் தொடர்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட முதல்வர் வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கேட்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.