உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று முதல் முறை வருகை தருகிறார். அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’குடியரசுத் தலைவர், ஸ்ரீ ஹனுமான் கர்ஹி கோயில், பிரபு ஸ்ரீ ராமர் கோயில் மற்றும் குபேர் டீலாவில் தரிசனமும், சரயு பூஜை மற்றும் ஆரத்தியும் செய்வார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக, இன்று அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்த மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ”500 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு பின்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமிருந்து மக்கள் இங்கு தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். கோவில் விவகாரத்தில் அரசியல் செய்வோரிடம் அதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
திரௌபதி முர்மு இந்த நாட்டின் குடியரசுத் தலைவரானது எதிர்க் கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை. காங்கிரஸ் தொடர்ந்து தேர்தலில் இது தொடர்பான பொய்களைப் பரப்பி வருகிறது. நமது குடியரசுத் தலைவருக்கும், முன்னாள் குடியரசுத் தலைவர்களுக்கு ’பிரான பிரதிஷ்டை’ அழைப்பிதழ் அனுப்பப்பட்டது குறித்து அனைவருக்கும் தெளிவுபடுத்தப்பட்டபோது ராகுல் காந்தியின் பொய்கள் அம்பலப்பட்டன” என்றார்.
ஜனவரி 22 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட அயோத்தி ராமர் கோவிலுக்கு அனைத்துத் துறை பிரபலங்களும் கலந்துகொண்ட போது, குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.