ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி என்று ராகுல் கூறினார்.

News image
நரேந்திர மோடி / ராகுல் காந்தி
Updated On :1 மே 2024, 9:29 am

DIN

கர்நாடக மாநிலத்தில், மதசார்பற்ற ஜனதா தள தலைவர் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருப்பது குறித்து கடுமையாக விமரிசித்திருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல், பிரதமர் மோடியின் அரசியல் குடும்பத்தில், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் அது தொடர்பான விடியோக்கள் வெளியாகி, அதில், பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதும் தெரிய வந்திருப்பது கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றச்சாட்டு தீவிரமடைந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா, வெளிநாட்டுக்குத் தப்பியோடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான சர்ச்சைக்குரிய விடியோ வெளியான நிலையில், அவர் நேற்று கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி. ரேவண்ணா மீது பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் குற்றவியல் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், கர்நாடக மாநிலத்தில் பாஜக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் கையிலெடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, கர்நாடகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடூரமான குற்றங்களுக்கு எதிராக, பிரதமர் நரேந்திர மோடி வழக்கமாக மேற்கொள்ளும் அவமானத்துக்குரிய மௌனத்தையே கடைபிடிக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம் பதில் சொல்ல வேண்டும், எல்லாமே தெரிந்திருந்தும், இதுபோன்று நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்த சாத்தான்களுக்காக ஏன் பிரதமர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்? வெறும் ஓட்டுக்காகவா? இந்த அளவுக்குப் பிரச்னை நடந்திருக்கும்போது, எப்படி ஒரு மிகப்பெரிய குற்றவாளி, நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருக்க முடியும்? இதுதான், பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் குடும்பத்தில், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு நிச்சயம் என்பதை நிரூபித்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.