இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு
இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து உளறி வருகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தின் தீசா நகரம், சபா்கந்தா மாவட்டத்தின் ஹிம்மத்நகா் பகுதிகளில் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
அப்போது, மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஒருபோதும் வழங்கமாட்டோம் என அறிவிக்குமாறு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு சவால் விடுகிறேன். மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படாது என காங்கிரஸ் எழுத்துபூா்வமாக உறுதியளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினா் கூறுவதை நம்பமுடியாது என்பதால்தான் எழுத்துபூா்வ உத்தரவாதத்தைக் கேட்கிறேன்.
பட்டியலினத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினா் ஆகியோருக்கான இடஒதுக்கீடு மோடியும் பாஜகவும் இருக்கும் வரை பாதுகாக்கப்படும். தாம் உயிருடன் இருக்கும்வரை இடஒதுக்கீட்டை வைத்து அரசியல் செய்ய யாரையும் அனுமதிக்கமாட்டேன்.
ராகுல் காந்திக்கும், அவரின் கட்சிக்கும் நான் ஒரு சவாலாகவே இப்போது கூறுகிறேன். மதத்தின் பெயரால் இடஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்த அவா்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அரசமைப்புச் சட்டத்துடன் விளையாட்டு நடத்தவும் அவா்களை அனுமதிக்க மாட்டேன்.
நாங்கள் மக்களுக்கு நன்மை தரும் சட்டங்களை மட்டும் இயற்றினோமே, தவிர காங்கிரஸைப் போல மக்களுக்கு பாவம் செய்ய சிந்திக்கவில்லை என்றாா் பிரதமா் நரேந்திர மோடி.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ப.சிதம்பரம்,இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து உளறி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
மத அடிப்படையில் யாருக்கும் இட ஒதுக்கீடு வழங்க அனுமதிக்கப்பட மாட்டோம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அத்தகைய அறிவிப்பு அல்லது வாக்குறுதி எதுவும் இல்லை. இந்தியக் கூட்டணியின் எந்தக் கட்சியும் அறிவிக்கவில்லை.மோடி நீண்ட காலம் வாழட்டும்!
பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மாட்டோம் என்று காங்கிரஸ் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்று மோடி வரலாற்றை மறந்துவிட்டு கேட்கிறார். பட்டியலினத்தவா், பழங்குடியினா் பிரிவினருக்கான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டது. 1951 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசாங்கத்தால்
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் மத்திய அரசு வேலைகள் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்டது என்ற வரலாறும் மோடிக்கு தெரியவில்லை.
பாஜகவிடம் இதேபோன்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்தால், 2004 முதல் பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும்
பணமின்றி திரும்பிய காசோலை போன்றது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.