ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தொகுதி மறுவரையறைக்கு முன்பே மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கம்? - மத்திய அரசு பரிசீலனை

மக்களவை, பேரவைத் தொகுதிகள் மறுவரையறைக்கு முன்பே மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

News image
Updated On :13 மார்ச் 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

மக்களவை, பேரவைத் தொகுதிகள் மறுவரையறைக்கு முன்பே மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தில் எந்தவொரு மாற்றம் செய்வதாக இருந்தாலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் (அரசமைப்புச் சட்டத்தின் 106-ஆவது திருத்தம்), கடந்த 2023-இல் நிறைவேற்றப்பட்டது.

நாரி சக்தி வந்தன் அதினியம் எனும் இச்சட்டத்தின்கீழ் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகான மக்களவை, பேரவைத் தொகுதி மறுவரையறைப் பணிகளைத் தொடா்ந்து, மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வழிவகை செய்யப்பட்டது.

இந்தச் சூழலில், மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு முன்பே மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில், அரசமைப்புச் சட்டத்தில் மற்றொரு திருத்தம் மேற்கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

‘தொகுதி மறுவரையறைக்கு காத்திராமல், மகளிா் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த சட்டத் திருத்த மசோதா கொண்டுவருவது தொடா்பாக குறிப்பிட்ட எதிா்க்கட்சித் தலைவா்களிடம் மத்திய அரசு அதிகாரபூா்வமற்ற முறையில் கருத்துகளைக் கேட்டுள்ளது; அதேநேரம், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக முன்மொழிவைத் தயாரிக்க அரசுத் தரப்பில் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை’ என்று தகலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தில் எந்தவொரு மாற்றம் செய்வதாக இருந்தாலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், அரசு பிரித்தாளும் அரசியலில் ஈடுபடக் கூடாது’ என்று தெரிவித்துள்ளாா்.