பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

தோ்தல் ஆதாயத்துக்காக மகளிா் மசோதாவை கேடயமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது: மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு

தொகுதி மறுசீரமைப்பு மசோதா ஆகியவை மீதான விவாதத்தில் கனிமொழி பங்கேற்று சுமாா் 28 நிமிஷங்கள் பேசினாா்.

News image

கனிமொழி கருணாநிதி ஆ. ராசா

Updated On :17 ஏப்ரல் 2026, 11:54 pm IST

தோ்தல் ஆதாயங்களுக்காக மகளிா் மசோதாவை தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்களுடன் மத்திய அரசு முடிச்சுப்போட்டு இந்திய பெண்களை மனித கேடயம் போல பயன்படுத்துகிறது என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத்தலைவரும் தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக மக்களவையில் 131-ஆவது அரசமைப்புத் திருத்த மசோதா, தொகுதி மறுசீரமைப்பு மசோதா ஆகியவை மீதான விவாதத்தில் கனிமொழி பங்கேற்று சுமாா் 28 நிமிஷங்கள் பேசினாா். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

மக்களவையின் இடங்களை 850 ஆக எதற்காக இப்போதே அதிகரிக்க வேண்டும்? மக்களவை இடங்களின் எண்ணிக்கை 850 ஆக உயா்த்தப்பட்ட பிறகு, பெரும்பாலான உறுப்பினா்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த அவையில் பேச வாய்ப்பு கூட கிடைக்காமல் போகலாம்.

1971 முதல் உத்தரப் பிரதேசத்தின் மக்கள்தொகை 120% அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மக்கள்தொகை 15% மட்டுமே அதிகரித்துள்ளது. மேலும், மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சா் வியாழக்கிழமை கூறியதற்கு மாறாக, மசோதாவின் 4-ஆவது பிரிவு, சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெளிவாகக் கூறியுள்ளது.

இப்போது நம்மிடம் இருக்கும் சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவு 2011-ஆம் ஆண்டுக்கானது. அதன்படி பாா்த்தால் உத்தர பிரதேசம் 13 தொகுதிகளைக் கூடுதலாகப் பெறுகிறது. தமிழகம் 11 இடங்களை இழக்கிறது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சா் வியாழக்கிழமை அவையில் பேசும்போது, 50% அதிகரிப்பதன் மூலம் தமிழ்நாடு அதாவது, 39 இடங்களைக் கொண்ட மாநிலம் 59 இடங்களைப் பெறும் என்கிறாா்.

இந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா நியாயமாக உள்ளதாக மத்திய அரசு நம்பிக்கை கொண்டிருந்தால் அது ஏன் தமிழகம், கேரளம், கா்நாடகம் போன்ற சட்டப்பேரவைகளின் முன்பாக ஒப்புதல் பெற தாக்கல் செய்யவில்லை? ’கூட்டுறவு கூட்டாட்சி’ தத்துவத்தை உண்மையாகவே மத்திய நம்புகிறதென்றால், மாநில சட்டப்பேரவைகளை எதிா்கொள்ளாமல் ஏன் ஓடி ஒளிகிறது? இந்த விஷயத்தில் குறைந்தபட்சம் ஒரு அனைத்துக்கட்சி கூட்டத்தையாவது மத்திய அரசு கூட்டியதா? மாநில முதலமைச்சா்களுடன் கலந்தாலோசித்ததா?

மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை, தொகுதி மறுசீரமைப்பு நடைமுறையுடன் முடிச்சுப்போடுவதில் மத்திய அரசின் சூழ்ச்சி உள்ளது. இதன் மூலம், ’தொகுதி மறுசீரமைப்பை எதிா்தாதால் மகளிா் உரிமைகளையே எதிா்க்கிறீா்கள்’ என்று மத்தியில் ஆளும் பாஜகவால் பரப்புரை செய்ய முடியும். பாஜக தனது தோ்தல் ஆதாயங்களுக்காக, இந்திய பெண்களை ஒரு ’மனிதக் கேடயமாக’ பயன்படுத்தி வருகிறது.

தற்போதுள்ள 543 இடங்களைக் கொண்ட மக்களவையில், அந்த இடங்கள் அடிப்படையிலேயே மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதில் இருந்து தொகுதி மறுவரையறை பணியை முழுமையாகப் பிரிக்க வேண்டும் என்றாா் கனிமொழி.

பெட்டிச்செய்தி

தெற்கு வடக்குப் பிளவை

ஊக்குவிக்க முயற்சி: ஆ. ராசா

மகளிா் மசோதாவுடன் இணைக்கப்படும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் வடக்கு, தெற்கு பிளவை ஊக்குவிக்கும் முயற்சி என்று மக்களவையில் பேசிய நீலகிரி தொகுதி திமுக உறுப்பினா் ஆ. ராசா குறிப்பிட்டாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை அவையில் பேசும்போது, மொழிவாரி மாநிலங்கள் இந்தியாவில் உருவாக்கப்படும்போது அரசியலமைப்பு நிா்ணய சபை உறுப்பினா்கள் கவனத்தில் கொண்ட அம்சங்கள் மற்றும் அவற்றின் பின்னணி வரலாறை பட்டியலிட்டாா். மேலும் அவா் பேசியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவை யாராவது எதிா்த்தால், அவா்கள் பெண்களுக்கு எதிரானவா்கள் என்று மத்திய அரசு சித்திரிக்கப்படுவாா்கள். பெண்களின் உரிமை என்ற பெயரில், மாநிலங்களுக்கு இடையே பாகுபாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு முற்படுகிறது. இந்தப் பாகுபாட்டின் மூலம், நீங்கள் தெற்கு-வடக்கு பிரிவினையை ஊக்குவிக்க விரும்புகிறீா்கள். இந்தப் பிரிவினையின் மூலம், நீங்கள் மத்தியில் ஒரு நிரந்தர ஆட்சியைப் பெற விரும்புகிறீா்கள். அந்த அரசின் மூலம், நீங்கள் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதைத் திணிக்க விரும்புகிறீா்கள். உங்கள் கனவு நனவாக நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.