ராய்பூர்: இதுநாள்வரை கோடீஸ்வர வேட்பாளர்களின் தகவல்களே வாக்காளர்களை சென்றடைந்து வந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் கோர்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பழங்குடிப் பெண் சுயேச்சை வேட்பாளர் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன.
கோர்பா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் பழங்குடிப் பெண் தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளார். காரணம், அவரது ஸீரோ பேங்க் பேலன்ஸ்தான். அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தனது வங்கிக் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இவரது கதை, இந்திய ஜனநாயகத்தில், கோடிஸ்வரர்களைப் போலவே பணமில்லாத ஏழையும் மக்களவை அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைப் பெறுகிறார் என்பதை உலகுக்கு அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.
எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்களது கோரிக்கைகளை கேட்காத நிலையில், பைகா சமுதாயத்தைச் சேர்ந்த சாந்தி, மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்தார். அவரது கணவர் ராம் குமார், தனது மனைவியின் முடிவுக்கு உறுதுணையாக இருந்து தேர்தலில் போட்டியிட ஊக்குவித்தார். தங்களது வாழ்விடத்தில் இருக்கும் பிரச்னைகள் குறித்து யாரும் செவிசாய்க்காமல் இருப்பது குறித்து இருவருமே கடும் வேதனையில் இருந்தனர்.
இவர்கள் எப்படியோ சமாளித்து, 12,500 ரூபாயை சேர்த்து டெபாசிட் தொகையை செலுத்திவிட்டனர். பண்ணையில் கூலித் தொழிலாளியாக சம்பாதித்து சிறுக சிறுக சேமித்த எங்களது சின்ன சேமிப்புத் தொகை மற்றும் எங்களது ஊர் மக்களிடமிருந்து பெற்ற நன்கொடையைக் கொண்டு ரூ.12,500ஐ செலுத்தி விட்டோம் என்கிறார்.
ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கும் சாந்தி, எனது சமுதாய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே தேர்தலில் போட்டியிடுகிறேன். இப்பகுதியில், பைகா பழங்குடியின மக்கள் வசிக்கும் 10-12 பகுதிகளுடன், எனது கிராமத்தில் வசிப்பவர்கள், எனக்கு ஆதரவாக வாக்களிப்பதாக உறுதியளித்துள்ளனர். எனது போராட்டம் பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராகத்தான் என்கிறார்.
ஒரு குழந்தைக்கு தாயான சாந்தி, தனது கணவருக்கு விவசாயப் பணிகளில் உதவி செய்வதும், விவசாய கூலியாக வேலை செய்வதுமாக இருக்கிறார்.
மாவட்ட தலைமையகத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும், சாலை வசதியின்றி யாரும் அணுக முடியாத இடத்தில் அமைந்துள்ளது இக்கிராமம். சாலைகள் இல்லாததால், பொதுப் போக்குவரத்து வசதியும் கூட கனவாகவே உள்ளது.
பல ஆண்டு காலமாக பைகா சமுதாய மக்கள் வசிக்கும் இப்பகுதியின் முகத்தை மாற்ற வேண்டும் என்பதே லட்சியம் என்று சொல்லும் சாந்திக்கு, இந்த தேர்தல் எதைக் கொடுக்கும் என்று தெரியவில்லை. ஏற்கனவே பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். எனவே தோல்வி ஒன்றும் புதிதல்ல என்கிறார். அவரது குடும்பத்துக்கு ரூ.97,000 மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.