இன்றைய பிற்பகல் வணிகத்தின்போது ரூ.2 லட்சம் கோடியளவுக்கு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் கடுமையான சரிவைச் சந்தித்திருந்தன.
இன்றைய வணிகத்தில், ஒட்டுமொத்தமாக முதலீட்டாளர்கள், ரூ.2.19 லட்சம் கோடியளவுக்கு இழப்பை சந்தித்தனர். அதாவது, இன்றைய வர்த்தகத்தில் நிறுவனப் பங்குகள் ரூ.398.50 லட்சம் கோடியாக சரிந்துள்ளன. அதற்கு முந்தைய நாள் மே 8ஆம் தேதி வர்த்தகத்தின்போது அவற்றின் மதிப்பு ரூ.400.69 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சரிவுக்கு பல நிறுவனப் பங்குகளும் காரணமாக அமைந்திருந்தன. எல்அண்ட்டி, ஐடிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பஜாஜ் டிவின்ஸ், இந்துஸ்லான்ட் வங்கி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள் 5 சதவீதம் அளவுக்கு சென்செக்ஸ் வர்த்தகத்தில் இழப்பை சந்தித்தன.
மாதம் முழுவதும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்ததால் சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து 72,866ஐ எட்டியது.
எனினும், வாகன நிறுவனங்களின் பங்குகள் எப்படியோ சரிவை சரிகட்டின. சென்செக்ஸ் போலவே, நிஃபடியும் 180 புள்ளிகள் சரிந்து 22,122-ஐ எட்டியது. இவ்விரண்டுமே, முதலீட்டாளர்களின் எதிர்மறை திட்டமிடல் காரணமாகவே பங்குச்சந்தைகளில் எதிரொலித்ததாகக் கூறப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தை வணிகத்தின்போது 29 நிறுவனப் பங்குகள் 52 வாரத்தில் காணாத சரிவைக் கண்டன. 137 நிறுவனப் பங்குகள் 52 வாரத்தில் காணாத உயர்வைக் கண்டுள்ளன.
மொத்தமுள்ள 3,731 நிறுவனப் பங்குகளில் வெறும் 1,158 நிறுவனப் பங்குகள்தான் உயர்வுடன் வணிகமாகின. 2,413 நிறுவனப் பங்குகள் இறங்குமுகத்தையே சந்தித்துள்ளன. 160 பங்குகள் மாற்றமின்றி வணிகமானது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அதிக பங்குகள் விற்பனைக்கு வருவதால், பங்குச் சந்தைகளில் இந்த இறங்குமுகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.