தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உத்தரவில் உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி வழக்கில் கைதாகியுள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, இடைக்கால உத்தரவை (இடைக்கால ஜாமீன் மீது) வெள்ளிக்கிழமையன்று அறிவிப்போம், அன்றைய தினம் கைதுக்கு எதிராக தாக்கலான முக்கிய விவகாரமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று முன்னதாக தெரிவித்திருந்தார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் வகையில் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கையையொட்டி ஜூன் 5 ஆம் தேதி ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேஜரிவால் தரப்பு வழக்குரைஞர் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவர் மீண்டும் ஜூன் 2 ஆம் தேதி சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உத்தரவில் உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
கேஜரிவாலுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்
இடைக்கால ஜாமீன் பெற்ற அரவிந்த் கேஜரிவால் முதலமைச்சர் அலுவலகம், தலைமைச் செயலகம் செல்லக்கூடாது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கு குறித்து கேஜரிவால் கருத்து கூறக்கூடாது.
அலுவல் சார்ந்த கோப்புகளில் அரவிந்த் கேஜரிவால் கையெழுத்துப் போடக் கூடாது.
இடைக்கால ஜாமீன் தொகையாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு இடைக்கால ஜாமீன் பெற்ற அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது.