
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்களன்று முதல்வரை சந்திக்க அவரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சென்ற ஸ்வாதி மாலிவாலை, அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் தன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும், மார்பிலும் வயிற்றிலும் உதைத்ததாகவும், கன்னத்தில் பலமுறை அறைந்ததாகவும் மாலிவால் தில்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரின் அடிப்படையில் தில்லி போலீஸார் கேஜரிவாலின் உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. இதனிடையே தேசிய மகளிர் ஆணையம் பிபவ் குமாரை நேரில் ஆஜராகும்படியும் சம்மன் அனுப்பியது.
இந்த நிலையில், வியாழனன்று ஸ்வாதி மாலிவாலின் இல்லத்திற்குச் சென்ற தில்லி காவல்துறை, அவரிடம் சுமார் 4 மணி நேரம் அங்கு நடந்தவை அனைத்தும் விசாரித்து எப்ஐஆர் பதிவு செய்தது. பின்னர், ஸ்வாதி மாலிவால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, கேஜரிவாலின் இல்லத்தில் வைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் தில்லி காவல்துறை ஆய்வு செய்தது. சாட்சியங்களின் முகாந்திரங்களை வைத்து கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை காவல்துறை கைது செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.