
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரசாரப் பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
பிரயாக்ராஜ்ஜில் மக்களவைத் தேர்தலின் 6 ஆவது கட்ட வாக்குப்பதிவு மே 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரயாக்ராஜ் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் உஜ்வல் ராமன் சிங் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜகவின் நீரஜ் திரிபாதி களத்தில் உள்ளார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் இணைந்து தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் உஜ்வல் ராமனை ஆதரித்து பேசிய ராகுல் காந்தி, “உத்தர பிரதேசத்தில் பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும், அந்தத் தொகுதி பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி மட்டும்தான்.
இந்த மக்களவைத் தேர்தல் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் அதைத் தாக்குகின்றன, எந்த சக்தியாலும் அரசியலமைப்பைக் கிழித்து எறிய முடியாது.
பண்ணை விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நாங்கள் ஒரு சட்டத்தை உருவாக்கவுள்ளோம். மேலும், வேலையற்ற இளைஞர்களுக்கும் நாங்கள் ஆதரவை வழங்குவோம். அக்னிபத் திட்டத்தை குப்பையில் வீசிவிட்டு, முன்பிருந்தது போல் ராணுவத்தில் ஆள்சேர்ப்பை நடத்துவோம்" என்றார் ராகுல் காந்தி.
முன்னதாக, வாரணாசியை ஜப்பானின் அழகிய நகரமான கியோட்டோவாக மாற்றப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து பேசிய அகிலேஷ் யாதவ், ”பாஜக கரோனா தடுப்பூசி மூலம் மக்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்போது அரசமைப்பையும் அழிக்க விரும்புகிறது.
இந்தியா கூட்டணி அரசு அமைக்கப்பட்ட பிறகு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். ராணுவத்தில் ஆள்சேர்ப்புக்கான அக்னிபத் திட்டத்தை நாங்கள் திரும்பப் பெறுவோம், நிரந்தர வேலைகளை வழங்குவோம்" என்றார் அகிலேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.