

நில மோசடியுடன் தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக, ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 31-ஆம் தேதி கைது செய்தது.
இதற்கிடையே, தில்லி முதல்வா் கேஜரிவாலுக்கு கடந்த 10-ஆம் தேதி வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை சுட்டிக்காட்டி சோரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட தனக்கும் உடனடியாக இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்’ என சோரன் வலியுறுத்தினார்.
இந்த வழக்கின் நேற்றைய(மே 21) விசாரணையில், ஹேமந்த சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு எதிா்ப்பு தெரிவித்தாா்.
இந்த விவகாரத்தில் ஆழமான வாதங்களும், விளக்கமும் தேவைப்படுகிறது. நீதிமன்றத்தை திருப்திப்படுத்தும் அளவுக்கு போதிய விளக்கத்தை இருதரப்பும் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, விசாரணையை புதன்கிழமைக்கு (மே 22) ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று (மே 22) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ”தில்லி முதல்வரின் வழக்குக்கும் இவ்வழக்குக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக எந்தவித நீதிமன்ற உத்தரவும் இல்லை.
ஆனால், ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனுவை ஜார்க்கண்ட் விசாரணை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதனால் அவரின் ஜாமீன் மனுவை ஏற்க முடியாது.” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மக்களவை தோ்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஹேமந்த சோரன் தன்னுடைய ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.