![உச்ச நீதிமன்றம்](http://media.assettype.com/dinamani%2Fimport%2F2020%2F12%2F2%2Foriginal%2Fsupreme_court.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய 17சி படிவத்தை பொது வெளியில் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், மனு மீதான விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
பதிவான வாக்குகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய படிவம் 17-ஐ, 48 மணி நேரத்துக்குள் வாக்குச் சாவடி வாரியாக வெளியிட உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணை விடுமுறைக் கால அமர்வான, நீதிபதிகள் தீபன்கர் தத்தா மற்றும் சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், பதிவான வாக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட 17சி படிவம் வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டது.
இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில், ஒரு வாக்குச்சாவடியில் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்ற தகவலை அளிக்க உத்தரவிட்டால், தேர்தல் வேலைகளுக்கு இடையே, படிவம் 17-சியை வெளியிடுவது என்பது தேர்தல் ஆணையத்துக்கு அதிகப் பளுவாகிவிடும் என்று கூறி மனுவை ஒத்திவைத்தது.
மேலும், மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது, விடுமுறைக்காலம் முடிந்தபிறகு, இதற்கான உச்ச நீதிமன்ற அமர்வில் இந்த மனு விசாரிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
மக்களவைத் தேர்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவும் நிறைவுபெற்றதும் 48 மணி நேரத்துக்குள் வாக்குச் சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் பதிலளித்து தேர்தல் அணையம் அளித்த பிரமாணப் பத்திரத்தில், முதல்கட்டமாக வெளியிடப்படும் வாக்குப்பதிவு விவரங்களும், இரண்டாம் கட்டமாக தபால் வாக்குகளுடனும் சேர்த்து வெளியிடப்படும் விவரங்களும் வேறுபடும். இத்தகைய சூழலில் படிவம் 17சி பொதுவெளியில் வெளியிட்டல் மக்களிடையே குழப்பம் ஏற்படும்.
இது தேர்தல் நடைமுறை மீது களங்கம் சுமத்த வழிவகை ஏற்பட்டுவிடும். போலியான பிரதிகள் உருவாக்கப்பட்டு அவை சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அபாயமும் உள்ளது என தெரிவித்திருந்தது.
அதுபோல, வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய படிவம் 17 சி-ஐ பதிவேற்றம் செய்வது சட்டப்படி கட்டாயம் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.