
வடகிழக்கு மாநிலங்களில் கடந்தாண்டு நிகழ்ந்த வெவ்வேறு வன்முறைச் சம்பவங்களில் 38 பேர் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சக நிலைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட தரவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் பகிர்ந்துள்ளது.
இதையும் படிக்க: தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
மணிப்பூரில் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் அரங்கேறி வரும் பல்வேறு வன்முறை சம்பவங்களில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 250-ஐ கடந்துள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் சுமார் 60,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் பலர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அமைதியை நிலைநாட்ட பல்வேறு மத்திய பாதுகாப்புப் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற விவாதங்களின்போது மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பல்வேறு பதில்களில், கடந்தாண்டு மே. 3 முதல் டிச. 31 வரையிலான காலகட்டத்தில், மணிப்பூரில் வன்முறை சம்பவங்களில் சுமார் 160 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மத்திய அரசின் மேற்கண்ட அறிக்கையில் மணிப்பூர் நிலவரத்தை குறித்து தரவுகளை இணைக்காமல் விடுபட்டிருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
இதையும் படிக்க: மணிப்பூர்: காலவரையறையற்ற ஊரடங்கு அமல்!
உள்துறை அமைச்சக செயலர் கோவிந்த் மோகன் தலைமையிலான உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த 46 அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, வடகிழக்குப் பிராந்தியங்களில் வன்முறைச் சம்பவங்களில் கடந்த 2014-ஆம் ஆண்டு 212 பேர் கொல்லப்பட்டதாகவும், 2023-ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 38 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பிராந்தியங்களில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசுடன் ஒப்பிடுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் 2014 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் வன்முறைச் சம்பவங்களில் மக்கள் உயிரிழப்பு 82 சதவீதம் அளவுக்கு, வெகுவாகக் குறைந்திருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கையும் 824-இல் இருந்து(2014-ஆம் ஆண்டு), கடந்தாண்டு 243-ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகளைச் சார்ந்தோரின் மரணங்கள் 20-இல்(2014-ஆம் ஆண்டு), இருந்து கடந்தாண்டு 8-ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.