தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் ஐந்து முக்கிய ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கும், நிலுவை திட்டங்களுக்கும் ரயில்வே துறை முழுமையாக நிதி வழங்குகிறதா என்றும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள திட்டங்களை முடிக்க அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதா என்றும் வேலூர் தொகுதி திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை அளித்த எழுத்துபூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தென்னக ரயில்வே, தெற்கு மத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே ஆகிய மண்டலங்களுடன் தொடர்புடையவை. முந்தைய இரு நிதியாண்டுகளுடன் ஒப்பிடுகையில் நிகழ் நிதியாண்டில் ஏழு மடங்கு அதிகமாக ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 1 நிலவரப்படி 10 புதிய பாதை, 3 அகல ரயில் பாதை மாற்றும் திட்டம், 9 இரட்டைப்பாதை திட்டம் என மொத்தம் 2,587 கி.மீ. தூரத்துக்கு ரூ.33,467 கோடி மதிப்பில் தமிழகத்தில் முழுமையாகவோ பகுதியளவோ உடைய திட்டங்கள் பல நிலைகளில் நடக்கின்றன. இதில் 665 கி.மீ தூரத்துக்கான பணிகள் ரூ.7,153 கோடி செலவினத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
ரயில் திட்டங்களை செயல்படுத்தும் நிலத்தை கையகப்படுத்தும்போது அதை மதிப்பிட்டு இழப்பீட்டுத்தொகையை ரயில்வே துறையிடம் மாநில அரசு தெரிவிக்கும். அந்தத் தொகையை மாவட்ட நிலம் கையகப்படுத்துதல் ஆணையத்தின் கணக்கில் ரயில்வே துறை டெபாசிட் செய்யும். மாநில அரசின் ஆதரவில்தான் இத்திட்டங்களின் வெற்றி அடங்கியுள்ளது. அந்த வகையில் திண்டிவனம்-திருவண்ணாமலை (185 கி.மீ. புதிய பாதை) திட்டத்துக்கு தேவைப்படும் 273 ஹெக்டேர் நிலத்தில் 33 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்திப்பட்டு-புத்தூர் (88 கி.மீ. புதிய பாதை) திட்டத்துக்கு தேவைப்படும் 189 ஹெக்டேர், மொரப்பூர்-தருமபுரி (36 கி.மீ) திட்டத்துக்கு தேவைப்படும் 93 ஹெக்டேர், மன்னார்குடி-பட்டுக்கோட்டை (41 கி.மீ.) திட்டத்துக்கு 152 ஹெக்டேர், தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை (196 ஹெக்டேர்) திட்டத்துக்கு ஒரு ஹெக்டேர் கூட கையகப்படுத்தப்படவில்லை என்று அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல்-அரியலூா் இடையே புதிய ரயில் வழித்தடம்: மத்திய அமைச்சருக்கு எம்.பி. நன்றி
சென்ட்ரல் நிலையத்தில் ரூ.8 கோடி போதைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது

தெற்கு ரயில்வேயில் ரூ. 2,576 கோடியில் 5 புதிய திட்டங்களுக்கு அனுமதி! என்னென்ன?

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம்
விடியோக்கள்
அறிமுகமாகும் பாலிமர் நோட்டுகள் | RBI | Sanjay Malhotra | Governor of the Reserve Bank of India



