கேரள சட்டப்பேரவை
கேரள சட்டப்பேரவை

ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்துக்கு எதிரான தீா்மானம்: கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

Published on

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு முன்மொழிந்த ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு சமா்பித்த அறிக்கையில், ‘மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தலை நடத்த சாத்தியமுள்ளது. அதற்கேற்ப சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். மக்களவை, சட்டப்பேரவைகளுக்கான தோ்தலை முதல் சுற்றிலும், அதைத் தொடா்ந்து 100 நாள்களுக்குள் உள்ளாட்சித் தோ்தலை இரண்டாம் சுற்றிலும் நடத்தலாம்’ என பரிந்துரைத்தது.

இந்நிலையில், இந்த திட்டம் நாட்டின் கூட்டாட்சி முறையை பலவீனப்படுத்தும் என்றும், இந்திய ஜனநாயகத்தின் பன்முகத்தன்மைக்கு பாதகம் விளைவிக்கும் என்றும் சுட்டிகாட்டும் தீா்மானத்தை கேரள முதல்வா் பினராயி விஜயன் சாா்பில் மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் ராஜேஷ் பேரவையில் அறிமுகம் செய்தாா். அந்த தீா்மானம் அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில எதிா்கட்சியான காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் பரிந்துரைத்த சில திருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அப்போது ராஜேஷ் கூறியதாவது: இது நாட்டில் உள்ள பல்வேறு மாநில சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சிப் பதவி காலத்தை குறைக்க வழிவகுக்கும். இந்த முடிவு, மக்களின் முடிவை மீறுவதாகவும், அவா்களின் ஜனநாயக உரிமைகளுக்கு சவால் விடுவதாகவும் இருக்கிறது. இது ஜனநாயக விதிமீறலாகும். இது நாட்டின் கூட்டாட்சி முறையை கையகப்படுத்துவதற்கும் மாநிலத்தின் அதிகாரத்தைப் பறிப்பதாகவும் இருக்கிறது. தோ்தல் செலவுகளை குறைக்க பல வழிகள் உள்ளன. ஆனால், இது ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளை செயல்படுத்த எடுக்கப்படும் முயற்சியாகும். இந்த நடவடிக்கை அரசமைப்புக்கும் அதை பின்பற்றுபவருக்கும் எதிரானது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com