
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். அதில் மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
கந்தர்பால் மாவட்டத்தில் ‘ஸ்ரீநகர் - லே’ தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியில் தொழிலாளர்களை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை(அக்.20) மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் இரு தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நிகழ்விடத்திலிருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒரு மருத்துவரும் 3 தொழிலாளர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்த மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த கொடூரச் செயலில் தொடர்புடையவர்களுக்கு பாதுகாப்புப் படையினரால் தக்க பதிலடி கொடுக்கப்படுமென எச்சரித்துள்ளார்.
இந்நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.