

ஆந்திரத்தின் புதிய தலைநகரான அமராவதிக்கு ரயில் சேவைக்காக மத்திய அரசு ரூ. 2,245 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆந்திரத்திலிருந்து தெலங்கானா மாநிலம் கடந்த 2014-ல் பிரிக்கப்பட்டது. இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக கடந்த 10 ஆண்டுகளாக ஹைதராபாத் இருந்து வந்தது.
ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, தெலங்கானா, ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களும் 10 ஆண்டுகளுக்கு ஹைதராபாத் தலைநகர் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி இருக்கும் என்று கடந்த ஜூனில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
இதையும் படிக்க | 40 இடங்களில் 'ட்ரெக்கிங்' செல்லலாம்! - தமிழக அரசின் புதிய திட்டம்!
இந்நிலையில் அமராவதிக்கு ரயில் இணைப்பு வழங்குவதற்கு ரூ. 2,245 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, விஜயவாடா - ஹைதராபாத் ரயில் பாதையில் யெருபாலம் முதல் நாம்பூர் வரை 52 கிமீ தூரத்திற்கு ரயில் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக அமராவதி நதியில் 3.2 கிமீ நீளத்தில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த புதிய ரயில் பாதை சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களையும் இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திரத்தில் 2014-19 சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சிக் காலத்தில் அமராவதியைத் தலைநகராக முன்மொழிந்து ரயில் பாதைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இப்போது மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.