
தில்லியில் கடந்த இரு நாள்களில் காற்று மாசு மீண்டும் 'மிக மோசமான' நிலைக்குச் சென்றுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தில்லியில் இன்று காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 359 ஆக பதிவாகியுள்ளது. நேற்று (அக். 26) 255 ஆக இருந்த தரக் குறியீடு இன்று மிகவும் அதிகரித்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த இரு நாள்களில் காற்று வீசும் வேகம் குறைந்ததால் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
காற்றின் தரம் குறித்து கண்காணிக்கும் நிலையங்களில் 40-ல் 36 நிலையங்களிலிருந்து தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் ஆனந்த் விஹார், அலிபூர், பவானா, ஜஹாங்கீர்புரி, முந்த்கா, வாஸிர்பூர், விவேக் விஹார் மற்றும் சோனியா விஹார் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு கடுமையான பாதிப்பு இருப்பதாகவும், 28 இடங்களில் மிக மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை மையத்தின் கூற்றுப்படி இன்று தில்லியில் காற்றின் வேகம் 0 கி.மீ அளவிலேயே இருக்கிறது.
காற்றின் வேகம் கடந்த இரு நாள்களில் சரியான அளவில் இருந்ததால் ’மிக மோசமான’ நிலையில் இருந்த காற்றின் தரம் ’மோசமான’ நிலைக்கு மேம்பட்டதாகத் தெரிகிறது.
ஆனால், மீண்டும் இன்று காலை புகைமூட்டம் அதிகரித்துள்ளது.
நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 20.1 டிகிரியாகப் பதிவாகியுள்ளது. இது இந்த பருவத்திற்கான சராசரியை விட அதிகமாகும்.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை சுமார் 33 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.