அரசு மரியாதையுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு
அரசு மரியாதையுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்புபடம்: எக்ஸ்

புரூனே சென்ற மோடிக்கு மன்னர் ஹாஜி சார்பில் உற்சாக வரவேற்பு!

புரூனே சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு மன்னர் ஹாஜி ஹஸானால் போல்கியா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Published on

அரசு முறைப் பயணமாக புரூனே சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு மன்னர் ஹாஜி ஹஸானால் போல்கியா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா - புரூனே இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40-ம் ஆண்டையொட்டி அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப். 3) புரூனே சென்றுள்ளார்.

தில்லியிலிருந்து புரூனே தலைநகர் பந்தார் செரி பேகவானுக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்ற மோடிக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தெற்காசிய நாடுகளிலிருந்து பிரதமர் ஒருவர் புரூனே நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இப்பயணத்தில் இந்தியா - புரூனே இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர்.

7,000 கார்கள் கொண்ட புரூனே மன்னர்

இரண்டாம் எலிசபெத்துக்குப் பிறகு மிக நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாவது மன்னர் என்ற பெருமையை சுல்தான் ஹாஜி போல்கியா பெற்றுள்ளார். மேலும் தன்னிடமுள்ள அதிக எண்ணிக்கையிலான கார் சேகரிப்புகளாலும் பலரால் அறியப்படுபவர். இவற்றின் மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

புருனேயிலுள்ள எரிபொருள் மற்றும் எண்ணெய் ஆதாரங்களால், மன்னரின் சொத்துமதிப்பு மட்டும் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

அதிக சொகுசுக் கார்களை சேகரித்துள்ளதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார். இதுவரை சுமார் 7,000 சொகுசுக் கார்களை சேகரித்து வைத்துள்ளார். இதில் 600 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் உண்டு. இது தனி கின்னஸ் சாதனையாகவும் உள்ளது.

இந்த கார் சேகரிப்புகளில் ஃபெர்ராரி 450, பென்ட்லி 380. இதுமட்டுமின்றி போர்ச்சே, லம்போர்கினி, மேபேச் (Maybachs) , ஜாகுவார், பிஎம்டபிள்யூ, மெக்லார்னேஸ் (McLarens) உள்ளிட்ட கார்களும் அடக்கம் என சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தரவுகளை வெளியிட்டுள்ளது.

மன்னர் ஹாஜி ஹஸானால் போல்கியா, தனது மகள் இளவரசி மஜிதேதாவின் திருமணத்துக்காக 2007ஆம் ஆண்டு தங்க முலாம் பூசிய ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக அளித்தார்.

ஹாஜி போல்கியா வசித்துவரும் இஸ்தானா நூருல் இமாம் மாளிகையானது, உலகின் மிகப்பெரிய குடியிருப்பு மாளிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதன் பரப்பளவு 2 மில்லியன் சதுர அடி. முழுவதும் 22 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாளிகையில் 5 நீச்சல் குளங்கள், 1700 படுக்கை அறைகள், 110 காரேஜ் (வாகன நிறுத்துமிடங்கள்) உள்ளன. இவர் தனிப்பட்ட முறையில் விலங்கியல் பூங்காவையும் வைத்துள்ளார். அதில் 30 வங்கப் புலிகள் உள்ளன. போயிங் 747 என்ற விமானத்தையும் சொந்தமாக வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com