
ஜம்மு - காஷ்மீர் முதல் கட்டத் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 41.17% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகின்றது. முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ராணுவத்தின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், ஜம்மு - காஷ்மீர் மக்கள் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த தேர்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி 41.17% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக பஹல்காமில் 47.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து டி.எச்.போராவில் 43.66 சதவீதமும், தூருவில் 41.20 சதவீதமும் மற்றும் கோகர்நாக்கில் 41 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக டிராலில் 26.75 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஒட்டுமொத்தமாக, ஜம்மு பகுதியில் உள்ள இந்தர்வால் தொகுதியில் அதிகபட்சமாக 60.01 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.