124 கொகைன் மாத்திரைகளை வயிற்றுக்குள் மறைத்துக் கடத்த முயன்ற பெண் கைது!

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 124 கொகைன் மாத்திரைகளை வயிற்றுக்குள் மறைத்துக் கடத்த முயன்ற பிரேசிலைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் 124 கொகைன் மாத்திரைகளை வயிற்றில் வைத்துக் கடத்த முயன்ற பிரேசிலைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் கொகைன் நிரப்பப்பட்ட 124 மாத்திரைகளை (கேப்சூல்) வயிற்றில் வைத்துக் கடத்த முயன்ற பிரேசிலைச் சேர்ந்த பெண்ணை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.

கடத்த முயன்ற கொகைன் நிரப்பிய மாத்திரைகளின் கள்ளச்சந்தை மதிப்பு ரூ. 9.73 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரிலிருந்து வந்த அப்பெண்ணை தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் தான் வயிற்றில் போதை மாத்திரைகளைக் கடத்தி வந்ததை அந்தப் பெண் ஒப்புக் கொண்டுள்ளார். கைது செய்யப்பட்ட பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெஜெ அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

”பிரேசிலைச் சேர்ந்த அந்தப் பெண் ரூ. 9.73 கோடி மதிப்புள்ள 973 கிராம் அளவிலான 124 கொகைன் நிரப்பப்பட்ட மாத்திரைகளை வயிற்றில் கடத்தி வந்தார். போதைப் பொருள்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சோதனையில் அவற்றைக் கைப்பற்றியுள்ளோம். கைது செய்யப்பட்ட பெண்ணிற்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com