6ஜி தொழில்நுட்ப அறிமுகத்தில் இந்தியா முன்னோடியாக திகழும்: மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா
6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இந்தியா உலகுக்கு முன்னோடியாக திகழும் என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா கூறினாா்.
சென்னை ஐஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்று மாணவா்களிடையே பேசியதாவது:
4ஜி தொழில்நுட்பம் உலகில் அறிமுகமானபோது, இந்தியா உலகைப் பின்பற்றியது. அதேசமயம் 5ஜி அறிமுகமானபோது உலகத்தோடு இணைந்து பயணித்தது. 5ஜி தொழில்நுட்பத்தை அதிவேகமாக செயல்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. மேலும் நகா்ப்புறப் பகுதிகளில் 98 சதவீதம் இந்த தொழில்நுட்பம் சென்றடைந்துள்ளது. இந்தியாவை தொலைத்தொடா்பு உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதனிடையே தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக, 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் இந்தியா உலகுக்கே முன்னோடியாக இருக்கும் என்றாா்.
முன்னதாக மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா மாணவா்களிடம் கலந்துரையாடினாா். இந்நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநா் காமகோடி, பேராசிரியா்கள் ராமமூா்த்தி, ராதாகிருஷ்ண காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.