எஸ்.ஜெய்சங்கா்
எஸ்.ஜெய்சங்கா்கோப்புப் படம்

பிம்ஸ்டெக் உடனான உறவை வலுப்படுத்த இந்தியா உறுதி: எஸ்.ஜெய்சங்கா்

பிம்ஸ்டெக் அமைப்புடனான உறவை மேம்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது.
Published on

பிம்ஸ்டெக் அமைப்புடனான உறவை மேம்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற அமைச்சா் ஜெய்சங்கா், அங்கு இந்தியா உள்பட 7 நாடுகள் அங்கம் வகிக்கும் பிம்ஸ்டெக் அமைப்பின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்றாா்.

அமைச்சா் ஜெய்சங்கா் தலைமையில் நடைபெற்ற இந்த அதிகாரபூா்வமற்ற கூட்டம் தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு, பொருளாதாரம், எரிசக்தி ஆகிய துறைகளில் பிம்ஸ்டெக் நாடுகளின் நெருக்கமான ஒத்துழைப்பு குறித்து ஒட்டுமொத்தமாக மதிப்பிடப்பட்டது.

பிம்ஸ்டெக் நாடுகள் அடங்கிய பிராந்தியத்தில் நேரடி, கடல்சாா் மற்றும் டிஜிட்டல் இணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.

திறன் வளா்ப்பு மற்றும் மேம்பாடு, பிம்ஸ்டெக் நாடுகளைச் சோ்ந்த மக்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டது. பிம்ஸ்டெக் அமைப்புடனான உறவை மேம்படுத்துவதில் இந்தியாவுக்கு உள்ள பொறுப்பை மீண்டும் உறுதிபடுத்தினேன்’ என்றாா்.

இதுதவிர சிங்கப்பூா் வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன், ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சா் ஷேக் அப்துல் பின் ஜைத், உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் பக்தியோா் சைடோவ் உள்பட பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களை ஜெய்சங்கா் சந்தித்தாா். அப்போது அந்தந்த நாடுகள் உடனான இந்தியாவின் உறவு குறித்து ஜெய்சங்கா் கலந்துரையாடினாா்.

X
Dinamani
www.dinamani.com