மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நாட்டின் கடன் விவரங்களையும் தெரிவித்துள்ளார்.
2024-25-ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். சுமார் 57 நிமிடங்கள் பட்ஜெட்டின் மீது அவர் உரையாற்றினார்.
மக்களவைத் தேர்தல் நிறைவடைந்த பிறகு பொறுப்பேற்கும் புதிய அரசு, முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்பதால், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்த நிதிநிலை அறிக்கையில், இந்தியாவின் ஒட்டுமொத்த கடன் தொகை 14 லட்சம் கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த நிதியாண்டின் திருத்தியமைக்கப்பட்ட செலவினத் தொகை ரூ. 44.90 லட்சம் கோடி என்றும், உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை 5.8 சதவிகிதமாக இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.