கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தங்கி படித்துவந்த இறுதியாண்டு பி.டெக் மாணவர், அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்ததாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
27 வயதான நூர் முகமது, தற்கொலை குறிப்பு எதுவும் எழுதிவைக்கவில்லை. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கோட்டாவில் நடந்த மூன்றாவது தற்கொலை சம்பவம் இது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகமது, சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் இறுதியாண்டு படித்துவந்தார்.
இவர் தங்கியிருந்த அறையில் இருந்த மின்விசிறியில் படுக்கை விரிப்பை மாட்டி தூக்கில் தொங்கிய நிலையில் காவலர்கள் அவரது உடலை மீட்டுள்ளனர்.
2016 முதல் 2019 வரை கோட்டாவில் இன்ஜீனியரிங் நுழைவு தேர்வுக்காக தயாராகி வந்தவர் நூர் முகமது. அதன் பின்னர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கவே அங்கேயே தங்கி ஆன்லைன் வகுப்புகளில் படித்து வந்துள்ளார்.
ராஜஸ்தான் கோட்டா பகுதிக்கு நாடு முழுவதும் இருந்து நீட், ஜேஇஇ போன்ற நுழைவு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கல்வி கற்க வருகின்றனர்.
இதையும் படிக்க: புத்தாக்க நிறுவனங்களுக்கு ஆனந்த் மகிந்திராவின் அழைப்பு
மன அழுத்தத்தால் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையும் இந்த நகரத்தில் அதிகம். 2022-ம் ஆண்டில் மட்டும் 26 மாணவர்கள் இங்கு தற்கொலை செய்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].