தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை அழைப்பான் அனுப்பியது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி சட்டப்படி செயல்படும் எனத் தலைமை தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
திலி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் விசாரணை நடத்துவதற்காக ஜனவரி 3-ம் தேதி ஆஜராகுமாறு தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கேஜரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவாரா என்று செய்தியாளர் சந்திப்பின்போது கக்கரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இந்த கேள்விக்கு பதிலளிக்க எங்கள் சட்டக் குழு தயாராக இருக்கும். சட்டப்படி செயல்படுவோம் என்றார்.
நவம்பர் 2 மற்றும் டிசம்பர் 21-ம் தேதிக்கு ஆஜராகுமாறு முன்னதாக இரண்டு சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையில், அதனைத்தொடர்ந்து ஜனவரி 3-ம் தேதிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கேஜரிவாலுக்கு மூன்றாவது அழைப்பாணையை அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் ஏற்கனவே துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.