நிதீஷ் குமார் அவருடைய சொந்த கட்சிக்கே உண்மையாக இருக்க மாட்டார் என்று சுப்ரியோ பட்டாச்சார்யா விமர்சித்துள்ளார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா, “நிதீஷ் குமார் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று அவருக்கே தெரியாது.
அவர் மற்ற கட்சிகளுக்கு மட்டுமின்றி அவரது கட்சிக்கே உண்மையாக இருக்க மாட்டார். அவர் மீது நம்பிக்கை வைக்கவே முடியாது. அதனால்தான் அவருக்கு இந்தியா கூட்டணியில் முக்கிய பொறுப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை.
பிகார் மக்கள் அரசியல் விழிப்புணர்வு உடையவர்கள். இவர் அடிக்கடி கூட்டணி மாறிக் கொண்டே இருப்பதை அவர்கள் ஏற்க மாட்டார்கள்.” என்று தெரிவித்தார்.
முன்னதாக, 2014 வரை பாஜக கூட்டணியில் இருந்த நிதீஷ் குமார், 2015 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியில் இணைந்து முதலமைச்சரானார். பின்பு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி, பாஜக ஆதரவுடன் முதல்வர் பதவி வகித்தார்.
அதேபோல, 2020ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக உடன் சேர்ந்து வென்ற நிதீஷ் குமார், தேர்தலுக்குப் பின்பு அக்கூட்டணியில் இருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.