மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு... வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

சுமார் 12 மணி நேர விவாதத்துக்குப் பின் மசோதா வியாழக்கிழமை(ஏப். 3) அதிகாலை நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு... வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!
PTI
Updated on
1 min read

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை(ஏப். 3) அதிகாலை நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நடத்தப்பட்ட நிலையில், புதன்கிழமை(ஏப். 2) நள்ளிரவில் வாக்கெடுப்பும் நடைபெற்றது.

நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழு, 655 பக்க அறிக்கையை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், விவாதத்தில் பங்கேற்று தங்களின் கருத்துகளை புதன்கிழமை பதிவு செய்தனர்.

இந்தநிலையில், வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகள்; எதிர்த்து 232 வாக்குகளும் பதிவாகியுள்ளன.

அடுத்தக்கட்டமாக, இந்த மசோதா மீது மாநிலங்களவையில் வியாழக்கிழமை(ஏப். 3) பகல் விவாதம் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறவேற்றப்பட்டதற்கு, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ள நிலையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் சுமார் 8 மணி நேரம் வரை விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்படுமென்றும் கூறப்படுகிறது.

அம்சங்கள் என்னென்ன?: வக்ஃப் தீா்ப்பாயங்கள் வலுப்படுத்தப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட தோ்வு நடைமுறை பராமரிக்கப்படும். வக்ஃப் வாரியங்களுக்கு வக்ஃப் அமைப்புகளால் வழங்கப்படும் கட்டாய பங்களிப்பு 7 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும். ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் வக்ஃப் அமைப்புகள், அரசால் நியமிக்கப்படும் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்படும்.

வக்ஃப் சொத்து மேலாண்மையில் திறன்-வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த மையப்படுத்தப்பட்ட வலைதளம் உருவாக்கப்படும்.

இஸ்லாத்தை ஏற்று பின்பற்றுவோா் (குறைந்தபட்சம் 5 ஆண்டுகள்) மட்டுமே தங்களின் சொத்துகளை வக்ஃப்-க்கு அா்ப்பணிக்க முடியும்.

வக்ஃப் நன்கொடைக்கு முன்பாக நன்கொடையாளரின் பெண் வாரிசுதாரா்களுக்கு சொத்துரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.

அரசு சொத்துகள் வக்ஃப் சொத்தாக உரிமை கோரப்பட்டால் மாவட்ட ஆட்சியருக்கு மேற்பட்ட அந்தஸ்து கொண்ட அதிகாரி விசாரிப்பாா். பிரச்னை எழும் பட்சத்தில், அரசு உயரதிகாரியே இறுதி முடிவெடுப்பாா் (இப்போது வக்ஃப் தீா்ப்பாயங்கள் முடிவெடுக்கின்றன).

மத்திய-மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் இடம்பெறுவா் ஆகிய அம்சங்கள் மசோதாக்களில் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக, மக்களவையில் கடந்த ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை பாஜக எம்.பி. ஜக தாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com