ஜாலியன்வாலா பாக் பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது சுட்டுக்கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.
நம் நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றபோது கொண்டுவரப்பட்ட எதேச்சாதிகார ரௌலட் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபின் அமிருதசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலா பாக் பகுதியில் கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அமைதியாகக் கூடிய அவர்கள் மீது பிரிட்டிஷ் போலீஸார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.
ஜாலியன்வாலா பாக் பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் அன்னை இந்தியாவைக் காக்க ஜாலியன்வாலா பாக் பகுதியில் தங்களின் உயிரைத் தியாகம் செய்த அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் புகழஞ்சலி செலுத்துகிறேன். அவர்களது தியாகமானது நமது சுதந்திரப் போராட்டத்தை வலுவடையச் செய்தது. அவர்களுக்கு இந்தியா என்றென்றும் கடன்பட்டுள்ளது.
ஜாலியன்வாலாபாக் தியாகிகளிடம் இருந்து உத்வேகம் பெற்று இந்தியாவின் வளர்ச்சிக்கு நாட்டு மக்கள் தொடர்ந்து பங்களிப்பார்கள் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மரியாதை: இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் 'ஜாலியன்வாலா பாக் தியாகிகளுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். அவர்களது உணர்வுகளை வரும் தலைமுறைகள் எப்போதும் நினைவில் கொண்டிருக்கும். நமது நாட்டின் சரித்திரத்தில் ஜாலியான்வாலா பாக் என்பது ஒரு கருப்பு அத்தியாயமாகும். இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் தியாகமானது நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.