ஜம்மு - காஷ்மீர் புறப்பட்டார் அமித் ஷா!
சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றதைத் தொடர்ந்து உள் துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்குப் புறப்பட்டுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியிலுள்ள சுற்றுலா தளத்திற்கு பயணிகள் இன்று (ஏப். 22) வழக்கம்போல் சென்றுள்ளனர். அங்கு முகமூடி அணிந்த தீவிரவாதிகள் பயணிகளை நோக்கி திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பயணிகளில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த நபர், கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மஞ்சுநாத் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் பகுதியிலுள்ள பைசரன் பள்ளத்தாக்கில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளம் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கால நிலை, சுற்றுச்சூழல் ஆகியவற்றால் இப்பகுதி மினி ஸ்விட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது.
இப்பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் மீது பிற்பகல் 2.30 மணியளவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாதுகாப்புப் படையினர் மருத்துவக் குழுவுடன் விரைந்தனர்.
படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அவர்கள் அனுமதித்தனர். சிலர் ரத்த காயங்களுடன் சுய நினைவின்றி கிடந்ததாகவும், உடன் வந்தவர்களைக் காணவில்லை எனவும் சுற்றுலாப் பயணிகளில் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
அமித் ஷாவுடன் ஆலோசனை
பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உடன் அமிதா புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிக்க | ஜம்மு - காஷ்மீர்: சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.