

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து, செளதி பயணத்தை பாதியில் முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பெஹல்காமில் இருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் பைசாரன் பள்ளத்தாக்கு உள்ளது. அடர்ந்த பைன் மரக் காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட இந்த இடம் "சிறிய ஸ்விட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது.
இப்பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை கூடியிருந்தபோது, பைசாரன் மலையிலிருந்து புல்வெளி பகுதிக்குள் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொடூர தாக்குதலை நடத்தினர்.
இந்த கொடூர தாக்குதலில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இக்கொடூர தாக்குதலுக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட "லஷ்கர்-ஏ-தொய்பா' பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான "தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது.
நாடு திரும்பினார் மோடி
அரசுமுறை பயணமாக செளதி அரேபியா சென்ற பிரதமர் மோடி, தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு புதன்கிழமை காலை தில்லி வந்தடைந்தார்.
முன்னதாக, இந்தத் தாக்குதலுக்கு கண்டனம், இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, "இக்கொடூர தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்களின் தீய செயல்திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்களின் உறுதி அசைக்க முடியாதது. அது இன்னும் வலுவடையும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.