
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக உத்தரப் பிரதேசத்திலுள்ள ஞானவாபி மசூதிக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து ஜம்மு - காஷ்மீரிலும், மகாராஷ்டிரத்திலும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஞானவாபி அருகே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் தலத்தில் அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.
ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா நகரமான, அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர்.
அப்போது மரங்களிடையேயிருந்து பாதுகாப்புப் படையினரின் உடை அணிந்து முகமூடியுடன் நுழைந்த பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே பஹல்காமில் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் இந்து மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோன்று மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சி (உத்தவ் அணி) தலைமையில் போராட்டம் நடைபெற்றது. புணேவில் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலானது அரசின் தோல்வியையும் உளவுப் பிரிவின் இயலாமையையுமே காட்டுவதாக சிவசேனை விமர்சித்தது.
இதேபோன்று தெலங்கானாவிலும் மாநில அளவிலான போராட்டத்துக்கு பாஜக மாநிலத் தலைவரும் நிலக்கரி சுரங்கத் துறை அமைச்சருமான கிஷண் ரெட்டி அழைப்பு விடுத்திருந்தார்.
இதையும் படிக்க | பெஹல்காம் தாக்குதல்: மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.