

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவரான தொழிலதிபர் சுபம் திவேதியின் குடும்பத்தினரைச் சந்திக்கக் காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்கிழமை கான்பூருக்குச் செல்கிறார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் கடந்த செவ்வாயன்று பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவரான சுபம் திவேதியின் குடும்பத்தினரைச் சந்திக்க காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்கிழமை கான்பூருக்குச் செல்கிறார்.
ரேபரேலி, அமேதி பயணத்தை முடித்த பிறகு, கான்பூரில் உள்ள சுபமின் குடும்பத்தினரை ராகுல் சந்திக்க உள்ளதாக உ.பி. காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அஜய் ராய் செவ்வாய்க்கிழமை தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
முன்னதாக, பஹல்காம் தாக்குதல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர்.
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் குறித்துக் கேள்விப்பட்டு, இறந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் ராகுல் காந்தி நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களின் உடல்நலனைப் பற்றிக் கேட்டறிந்தார். தேசிய ஒற்றுமையைப் பொறுத்தவரை, காங்கிரசும் அதன் தலைமையும் எப்போதும் நாட்டிற்கு முதலிடம் கொடுத்து வருகின்றன என்று ராய் கூறினார்.
கான்பூரைச் சேர்ந்த 31 வயதான தொழிலதிபர் சுபம் திவேதி இரண்டு மாதங்களுக்கு முன்பு பிப்ரவரி 12 அன்று திருமணம் செய்து கொண்டார். ஏப்ரல் 22 அன்று, காஷ்மீரின் பஹல்காமில் தனது மனைவியின் கண் முன்னே அவர் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.