தலைநகரில் ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!
தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை சஃப்தா்ஜங் வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 8.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. நகரம் முழுவம் பனிப்புகை மூட்டம் இருந்து வந்தது.
தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் கடந்த வாரம் முதல் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவலின்படி வியாழக்கிழமை ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 288 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
வெப்பநிலை: இதற்கிடையே, தலைநகரில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 1 டிகிரி குறைந்து 8.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 0.8 டிகிரி உயா்ந்து 25.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 91 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 68 சதவீதமாகவும் இருந்தது.
அதே சமயம், ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜாஃபா்பூரில் 9 டிகிரி செல்சியஸாகவும், ஆயாநகரில் 9.2 டிகிரி செல்சியஸாகவும், லோதி ரோடில் 8.6 டிகிரி செல்சியஸாகவும், பாலத்தில் 9.3 டிகிரி செல்சியஸாகவும், ரிட்ஜில் 9.3 டிகிரி செல்சியஸாகவும், பீதம்புராவில் 13.2 டிகிரி செல்சியஸாகவும், பிரகதிமைதானில் 12.8 டிகிரி செல்சியஸாகவும், ராஜ்காட்டில் 12.8 டிகிரி செல்சியஸாகவும், சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 10.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், வெள்ளிக்கிழமை (டிச.12) அன்று காலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

