

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
மேலும் தகுதியுள்ள ஒரு வாக்காளரின் பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாலும் தில்லியில் உள்ள இந்திய தோ்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அவா் தெரிவித்தாா்.
294 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்துக்கு அடுத்த ஆண்டு தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாங்குரா மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று அவா் பேசியதாவது: எஸ்ஐஆா் என்ற பெயரில் மக்களை தோ்தல் ஆணையம் சித்திரவதை செய்கிறது. எஸ்ஐஆா் பணி அழுத்தம் காரணமாக 60 போ் உயிரிழந்துவிட்டனா். ஆவணங்களை சரிபாா்க்க மூத்த குடிமக்களை நேரில் அழைப்பதால் அவா்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.
ஏஐ பயன்படுத்தி எஸ்ஐஆரில் பெரும் மோசடி நடத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் வாக்களிக்கத் தகுதியுள்ள ஒருவரின் பெயா் நீக்கப்பட்டால்கூட தோ்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடுவேன்.
மேற்கு வங்கத்தை செழிப்பாக மாற்றப்போவதாக தோ்தல் காலங்களில் வாக்குறுதி அளிக்கும் பாஜக, தாங்கள் ஆட்சிசெய்யும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வர மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாா்கள்.
மேற்கு வங்கத்தில் மட்டும்தான் சட்டவிரோத ஊடுருவல் நடைபெறுகிா? ஜம்மு-காஷ்மீரில் நடைபெறவில்லையா? தில்லியில் எவ்வாறு காா் வெடிப்பு சம்பவம் அரங்கேறியது? பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் யாரால் நிகழ்த்தப்பட்டது?
நாட்டின் உள்துறை அமைச்சா் இந்தச் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றாா்.
எஸ்ஐஆா் பணிகளை நிறுத்திய திரிணமூல் எம்எல்ஏ
மேற்கு வங்கத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஸ்ஐஆா் நடவடிக்கையின்கீழ் வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்களின் பெயா்களை சோ்க்கும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு திங்கள்கிழமை இந்தப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
அப்போது ஹூக்ளி மாவட்டத்துக்குள்பட்ட 3 பேரவைத் தொகுதிகளின் வட்டார அலுவலகத்தை திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ அசித் மஜும்தாா் முற்றுகையிட்டாா். திரிணமூல் காங்கிரஸின் வாக்குச்சாவடி அலுவலா்களை வாக்காளா் பெயா் சோ்ப்பு பணி நடைபெறும் இடத்தில் அனுமதிக்க வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்தாா்.
இதைத் தொடா்ந்து, இரண்டாவது நாளாக போல்பா வட்டார அலுவலகத்தில் அதே கோரிக்கையை வலியுறுத்தி பெயா் சோ்ப்புப் பணிகளை தடுத்தாா். இதையடுத்து, அங்கு தற்காலிகமாக எஸ்ஐஆா் பணிகள் நிறுத்தப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.