
பசுவைக் கடத்துவது தொடர்ந்தால், கடத்துபவர்களை நடுரோட்டில் சுட்டுக் கொல்ல உத்தரவிடுவேன் என்று கர்நாடக அமைச்சர் மங்கல் எஸ் வைத்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பசுக்களை பாதுகாக்கவும், பசுக்களின் உரிமையாளர்களின் நலனைக் காக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் பசுக்களை திருடும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், ஹொன்னாவர் அருகே கர்ப்பிணிப் பசுவை மர்ம நபர்கள் படுகொலை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உத்தர கன்னட மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான வைத்யா செய்தியாளர்களுடன் பேசியதாவது:
”பசு திருட்டு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று காவல்துறை கண்காணிப்பாளரிடம் கூறியுள்ளேன். நாம் பசுக்களை வணங்குகிறோம். அதன் பால் குடித்து வளர்கிறோம்.
பசுக்களை கடத்துபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், சாலையில் வைத்து சுடப்படுவார்கள் என்று நான் எச்சரிக்கை விடுக்கிறேன். வேலை செய்து சம்பாதித்த சாப்பிடுங்கள், மாவட்டத்தில் போதுமான வேலைகள் உள்ளன. ஆனால், பசு கடத்துபவதை எக்காரணம் கொண்டும் ஆதரிக்க மாட்டோம்.
பாஜக ஆட்சியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. தற்போது அரசை பாஜகவினர் குறிவைக்கின்றனர். நாங்கள் அமைதியாக இருப்பதாக கூறுகிறார்கள், பின்னர் யார் கைது செய்கிறார்கள், யார் எஃப்ஐஆர் பதிவு செய்கிறார்கள்?
இந்தப் பிரச்னையில் அரசாங்கமோ, முதலமைச்சரோ அல்லது உள்துறை அமைச்சரோ யாரையும் ஆதரிக்க மாட்டார்கள். பசுக்களை வளர்ப்பவர்களைப் பாதுகாக்க நாங்கள் பாடுபடுவோம், பயப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.