கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி பேரவைத் தேர்தல்: 60% வாக்குப் பதிவு- நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 பிப்ரவரி 2025, 12:33 pm

DIN

நமது சிறப்பு நிருபர்

மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை (பிப்.8) எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும்.

ஆளும் ஆம் ஆத்மி, எதிர்க்கட்சியான பாஜக, காங்கிரஸ் ஆகியவை தனித்தனியாக தேர்தல் களம் கண்டதால் அனைத்துத் தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி நிலவியது. பகுஜன் சமாஜ் கட்சி, அகில இந்திய மஜ்லீஸ் கட்சி ஆகியவையும் தேர்தல் களம் கண்டன.

வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது மாளிகை எஸ்டேட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா வாக்குச்சாவடிக்கு காலை 9 மணியளவில் சென்று வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார்.

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், அவரது மனைவி சுதேஷ் தன்கர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, மத்திய அமைச்சர்கள் எஸ். ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் புரி, தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்úஸனா, முதல்வர் அதிஷி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் காலையிலேயே தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தனர்.

தில்லி முதல்வர் அதிஷி, வாக்குரிமையைச் செலுத்தும் முன்பாக கால்காஜி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், அவரது மனைவி சுனிதா கேஜரிவால், தந்தை ராம் கேஜரிவால், தாயார் கீதா தேவி, மகன் புல்கித் கேஜரிவால் என மூன்று தலைமுறை குடும்பத்தினர் புது தில்லி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி ஆர். அலைஸ் வாஸ், தில்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா, முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் தில்லியில் வாக்குரிமை பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்டோரும் தங்களது வாக்குரிமையைச் செலுத்தினர்.

வாக்காளர்கள் ஆர்வம்: தில்லியில் முதல் முறை வாக்காளர்கள், வயோதிகர்கள் உள்ளிட்டோர் பெருமளவில் வந்து வரிசையில் நின்று வாக்களிக்க ஆர்வம் காட்டினர். வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தில்லியின் சீலாம்பூர், கஸ்தூர்பா நகர் பகுதியில் போலி வாக்காளர்கள் வாக்குப் பதிவு செய்வதாக சர்ச்சை எழுந்ததால் அங்கு சலசலப்பு நிலவியது. முஸ்லிம்கள் அதிகம் வாழும் அப்பகுதியில் புர்கா அணிந்தபடி போலி வாக்காளர்கள் வந்ததாக பாஜகவினர் குற்றஞ்சாட்டி முழக்கமிட்டனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி, அவர்கள் போலி வாக்காளர்கள் இல்லை எனத் தெரிவித்த பிறகே அங்கு இயல்புநிலை திரும்பியது.

சலசலப்பு: கிரேட்டர் கைலாஷ் பகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் சௌரவ் பரத்வாஜ், சிராக் தில்லி பகுதியில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் சிலர் தடுப்பதாகப் புகார் தெரிவித்தார். முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா தனது தொகுதியான

ஜங்புராவில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடப்பதாக முறையிட்டார். இந்தப் புகார்கள் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததும் அங்கு இயல்புநிலை திரும்பியது.

தில்லி புறநகர் பகுதிகளில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் லேசான தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும், தேர்தல் அலுவலர்கள், காவல் துறையினர் தலையிட்டதைத் தொடர்ந்து அங்கு இயல்புநிலை சில நிமிடங்களில் திரும்பின.

பலத்த பாதுகாப்பு: தலைமைத் தேர்தல் ஆணைய தரவுகளின்படி, தில்லியில் வாக்களிக்க சுமார் 1.56 கோடி பேர் தகுதி பெற்றிருந்தனர். இதில் 83.76 லட்சம் ஆண்கள், 72.36 லட்சம் பெண்கள் மற்றும் 1,267 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள். இந்த ஆண்டின் முதலாவது பெரிய தேர்தலை தில்லி எதிர்கொண்டதையொட்டி 13,766 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு அவற்றில் வாக்குப் பதிவு நடைபெற்றது. 220 கம்பெனி துணை ராணுவப் படையினர், 19,000 ஊர்க்காவல் படையினர், 35,626 தில்லி காவல் துறையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவிஎம் இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு: இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இடம்பெற்ற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) தில்லியின் 11 மாவட்டங்களில் உள்ள 19 இடங்களுக்கு கொண்டு வரப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேரமும் 350 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தில்லி காவல் துறை மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.