
புதுதில்லி: தில்லி பேரவைத் தேர்தலையொட்டி, முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் வாக்காளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம் என தெரிவித்துள்ளார்.
தில்லி பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்.5) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டன.
1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 70 தொகுதிகளில் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
13,766 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், முதல் முறையாக இளம் வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தில்லி பேரவைக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்று வருகிறது. "இந்த ஜனநாயகத் திருவிழாவில் தில்லி வாக்காளர்கள் அனைவரும் முழு ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது மதிப்புமிக்க வாக்குகளைப் பதிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளம் வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துகள். இதனை நினைவில் கொள்ளுங்கள் - முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்” என கூறியுள்ளார்.
2015 முதல் தில்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பாஜக தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.