
காங்கிரஸ் கட்சிக்கு குடும்ப நலனே முக்கியம்; ஆனால், பாரதிய ஜனதாவுக்கு நாட்டின் நலனே முக்கியம் என மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 6) உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
குடியரசுத் தலைவர் உரை மிகவும் சிறப்பாக இருந்தது. அனைவருக்குமானதாக இருந்தது. அனைவருக்கும் வளர்ச்சி என்பதை சிலரால் புரிந்துகொள்ளவும் முடியாது; ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
குடும்ப நலனே முக்கியம் என்பது காங்கிரஸ் கட்சியின் மாடல். நாட்டின் நலனுக்கு முன்னுரிமை என்பதே எங்கள் (பாஜக) மாடல். மக்கள் எங்கள் மாடலின் வளர்ச்சியை பரிசோதித்து புரிந்துகொண்டு ஆதரவு அளித்துள்ளனர்.
வளர்ச்சி மீதான நம்பிக்கையால்தான் மக்கள் எங்களை 3வது முறையாகத் தேர்வு செய்துள்ளனர்.
இரு அவைகளிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு தந்தது பாஜக அரசுதான். புதிய நாடாளுமன்றத்தில் முதல் நடவடிக்கையாக மகளிருக்கான இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.
காங்கிரஸ் பலவீனப்படுத்தும்
அனைவருக்கும் வளர்ச்சி என்பதை காங்கிரஸ் கட்சியிடம் எதிர்பார்க்க முடியாது. அது மிகப்பெரிய தவறு. அவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. ஏனெனில் அவர்களின் பாதை ஒற்றைக் குடும்பத்தின் நலனை நோக்கியே உள்ளது.
அம்பேத்கரின் நடவடிக்கைக்கு எதிராகச் செயல்பட்டது காங்கிரஸ் கட்சி. 2 முறை அம்பேத்கரை தேர்தலில் தோல்வி அடையச் செய்ய அனைத்துப் பணிகளையும் காங்கிரஸ் செய்தது. அம்பேத்கருக்கு சமுதாயம் அளித்த அங்கீகாரத்தால் தற்போது ஜெய்பீம் என காங்கிரஸ் கட்சியினர் முழங்குகின்றனர்.
மற்றவர்களை பலவீனப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபடுகிறது. இதனால்தான் கூட்டணி கட்சியினர் கூட காங்கிரஸ் கட்சி உடனான உறவை முறித்துக்கொண்டு விலகுகின்றனர்.
மற்றவர்களை பலவீனப்படுத்துவதை விட்டு, உங்கள் (காங்கிரஸ்) கட்சியை பலப்படுத்துங்கள். அப்படிச் செய்தால் எப்போதாவது மக்கள் உங்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.