
தில்லி ரயில் நிலையத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பலியான நிகழ்வுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இது மிகவும் சோகமான நிகழ்வு. இவை ஈடுகட்ட முடியாத மனித இழப்புகள் ஆகும். கும்பமேளாவிலேயே நாம் அறியாத எண்ணிக்கையிலான இறப்புகளைப் பார்த்திருக்கிறோம்.
கட்டுக்கடங்காமல் கூட்டம் கூடும்போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்களை நாம் அழைப்பதாகத் தோன்றுகிறது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஏனெனில் மனித உயிரைப் பாதுகாப்பதே முதன்மையானதாக இருக்க வேண்டும் என்றார்.
மகா கும்பமேளாவுக்குச் செல்லும் ரயில்களில் பயணிக்க தில்லி ரயில் நிலையத்தில் மக்கள் காத்துக்கொண்டிருக்கும்போது சனிக்கிழமை இரவு திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியது, சில விரைவு ரயில்கள் வர தாமதமானது, அதிக விலைக்கு சிலர் டிக்கெட்டுகளை விற்றுக்கொண்டிருந்தது உள்ளிட்டவை தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்காக காரணமாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் கூட்ட நெரிசல் ஏற்பட முக்கிய காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சிறப்பு உயர்நிலைக் குழு அமைத்து ரயில்வே துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.