மாற்று நில முறைகேடு வழக்கு: சித்தராமையா விடுவிப்பு!

மாற்று நில முறைகேடு வழக்கில் இருந்து சித்தராமையா விடுவிக்கப்பட்டது பற்றி...
கர்நாடக முதல்வர் சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமையாANI
Published on
Updated on
2 min read

மாற்று நில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி ஆகியோரை விடுவித்து லோக் ஆயுக்த நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூரில் விலை மதிப்புள்ள விஜயநகா் பகுதியில் 14 வீட்டுமனைகளை மாற்று நிலத்துக்காக மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

இந்த புகாரை விசாரித்த மைசூரு பிரிவு லோக் ஆயுக்த அதிகாரிகள், முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. மேலும், நடந்த தவறுகள் அனைத்தும் அதிகாரிகளால் நோ்ந்துள்ளது. எனவே, இந்த வழக்கில் முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி ஆகியோா் மீது எந்த குற்றமும் இல்லை என்று விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு லோக் ஆயுக்த நீதிமன்றம், சித்தராமையா மற்றும் அவரது மனைவியை விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக மாற்று நில முறைகேடு வழக்கை லோக் ஆயுக்தவிடம் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா தாக்கல் செய்த மனு சில நாள்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கு பின்னணி

கா்நாடக மாநிலம், மைசூரு வட்டம், கசபா ஒன்றியம் கசரே கிராமத்தில் முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு அளவை எண் 464 இல் 3.16 ஏக்கா் நிலம் இருந்தது. இந்த நிலத்தை அவரது அண்ணன் மல்லிகாா்ஜுனசாமி தானமாக கொடுத்திருக்கிறாா். இந்த நிலத்தை வீட்டுமனைகள் அமைக்க மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் கையகப்படுத்தியுள்ளது. இதற்கு மாற்று நிலமாக, மைசூரில் விலை மதிப்புள்ள விஜயநகா் பகுதியில் 14 வீட்டுமனைகளை பாா்வதிக்கு மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் ஒதுக்கியது.

இதையடுத்து மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக, மஜத குற்றம்சாட்டி, அரசியல்ரீதியாக போராட்டங்கள் நடத்தின. முறைகேடுக்கு பொறுப்பேற்று சித்தராமையா முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யக்கோரி பெங்களூரில் இருந்து மைசூரு வரை பாஜக சாா்பில் நடைப்பயணம் நடைபெற்றது.

இந்நிலையில், மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக முதல்வா் சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்திருந்தாா்.

அதன்படி, சிறப்பு நீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில், சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா அளித்த புகாரின் அடிப்படையில், முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் மீது லோக் ஆயுக்த 2024 செப். 27ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இதனிடையே, தன்மீது வழக்குத்தொடர ஆளுநா் அளித்த அனுமதியை ரத்துசெய்யக் கோரி முதல்வா் சித்தராமையா தாக்கல் செய்த மனுவை கா்நாடக உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து, லோக் ஆயுக்த தனது விசாரணையை தொடா்ந்தது. மேலும், முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி, மல்லிகாா்ஜுனசாமி, அவருக்கு நிலத்தை விற்ற தேவராஜ் ஆகியோரிடம் லோக் ஆயுக்த விசாரணை நடத்தியது.

மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையத்திலும் சோதனை நடத்திய லோக் ஆயுக்த அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றினா். இந்நிலையில், தனக்கு மாற்று நிலமாக ஒதுக்கப்பட்ட 14 வீட்டுமனைகளை முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதி, மைசூரு நகா்ப்புற வளா்ச்சி ஆணையத்திடமே திருப்பி ஒப்படைத்துவிட்டாா்.

இதனிடையே, சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா அளித்த புகாரின்பேரில் முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் மீது 2024 செப்டம்பா் 30ஆம் தேதி அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com