மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காப்பீட்டுத் தொகை கோரிய மூன்றில் ஒருவருக்கு பணம் நிலுவை!

2024ஆம் ஆண்டில் வாடிக்கையாளா்கள் கோரிய காப்பீட்டுத் தொகையில் ரூ.15,100 கோடியை தர மறுப்பு...

News image
சித்திரப் படம்- EPS
Updated On :3 ஜனவரி 2025, 4:52 am

DIN

2024 நிதியாண்டில் மருத்துவக் காப்பீட்டுத் தொகை கோரியவர்களில் மூன்றில் ஒருவருக்கு இன்னும் பணம் செலுத்தாமல் நிலுவையில் இருப்பதாக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

காப்பீட்டு சேவையின் தரத்தை மேம்படுத்த பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், காப்பீடு பெறுபவர்கள் தொடர்ந்து சிக்கலை எதிர்கொண்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் தங்களது மருத்துவ செலவுகளை ஈடு செய்ய வாடிக்கையாளா்கள் கோரியிருந்த காப்பீட்டுத் தொகையில் ரூ.15,100 கோடியை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் தர மறுத்தன. இது ஒட்டுமொத்தமாகக் கோரப்பட்டிருந்த காப்பீட்டுத் தொகையில் 12.9 சதவீதம் ஆகும்.

மதிப்பீட்டு நிதியாண்டில் மொத்தம் ரூ.1.17 லட்சம் கோடி மருத்துவக் காப்பீட்டுத் தொகை கோரி வாடிக்கையாளா்கள் விண்ணப்பத்திருந்தனா். ஆனால் அதில் ரூ.83,493.17 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. இது, மொத்த கேட்புத் தொகையில் 71.29 சதவீதம் ஆகும்.

மேலும், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.10,937.18 கோடிக்கான காப்பீட்டுத் தொகை விண்ணப்பங்களை முழுமையாக நிராகரித்தன. இது, ஒட்டுமொத்த கேட்புத் தொகையில் 9.34 சதவீதம்.

அந்த நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டும் இதுவரை பட்டுவடா செய்யப்படாமல் நிலுவையில் உள்ள காப்பீட்டுத் தொகை ரூ. 7,584.57 கோடியாக (6.48 சதவீதம்) உள்ளது.

வெளிப்படைத்தன்மை இல்லை

நாட்டில் உள்ள 327 மாவட்டங்களில் ஒரு லட்சம் பேரிடம் மருத்துவக் காப்பீடு தொடர்பாக லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற நிறுவனம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

காப்பீட்டுத் தொகை கோரி காப்பீட்டாளர்கள் நிறுவனத்திடம் விண்ணப்பிக்கும்போது, அதுதொடர்பான அனைத்து செயல்முறைகளையும் வலைதளத்தில் பதிவிட வேண்டும் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு 83 சதவிகிதம் பேர் இல்லை என்றும், 9 சதவிகிதம் பேர் ஏற்கெனவே செயல்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

காப்பீட்டுத் தொகைக்கு தாமதம்

முழு அளவிலான காப்பீட்டுத் தொகை கோரி விண்ணப்பிக்கும்போது, நிறுவனங்கள் செய்யும் தாமதத்தால் சோர்ந்து அவர்கள் அளிக்கும் அடிப்படை காப்பீட்டுத் தொகையை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறீர்களா என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

47 சதவிகிதம் பேர் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நடந்துள்ளதாகவும், 34 சதவிகிதம் பேர் தங்களுக்கு நடந்ததில்லை, ஆனால், நண்பர்களுக்கு நடந்து கேள்விப்பட்டுள்ளோம் எனவும் பதிலளித்துள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதில் தாமதம் ஏற்படாமல் இருக்க ஒரு மணிநேரத்துக்குள் காப்பீட்டுத் தொகையை விடுவிக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், 8 சதவிகிதம் பேர் உடனடியாக காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாகவும், 20 சதவிகிதம் பேர் 24 முதல் 48 மணிநேரமானதாகவும், பிறர் 3 மணிநேரம் முதல் 24 மணிநேரம் ஆனதாகவும் தெரிவித்துள்ளனர்.

காப்பீட்டுத் தொகை நிராகரிப்பு

நீரிழிவு நோய் போன்ற சில உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு காப்பீட்டுத் தொகை நிராகரிப்பு அல்லது குறைந்தபட்ச தொகை வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு 20 சதவிகிதம் பேர் சரியான காரணங்கள் கூறாமல் நிராகரிக்கப்பட்டதாகவும், 33 சதவிகிதம் பேர் குறைந்தபட்ச தொகை மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.