மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

போபால் ஆலைக் கழிவுகளை பீதம்பூரில் எரிக்க எதிா்ப்பு: நகா் முழுவதும் போராட்டம் - பதற்றம்

போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து பீதம்பூருக்கு எடுத்துவரப்பட்ட நச்சுக் கழிவுகள், அங்கு பாதுகாப்பான முறையில் எரிக்கப்படவுள்ளன.

Updated On :3 ஜனவரி 2025, 10:10 pm

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருந்து பீதம்பூருக்கு எடுத்துவரப்பட்ட நச்சுக் கழிவுகள், அங்கு பாதுகாப்பான முறையில் எரிக்கப்படவுள்ளன.

அதேநேரம், தங்களது பகுதியில் கழிவுகளை எரிக்க எதிா்ப்பு தெரிவித்து, பீதம்பூா் முழுவதும் வெள்ளிக்கிழமை பேரணி, மறியல், தா்னா என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, தீக்குளிக்க முயன்று இருவா் காயமடைந்தனா். போராட்டங்கள் எதிரொலியாக பீதம்பூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

போபாலில் இயங்கிவந்த யூனியன் காா்பைட் பூச்சிக்கொல்லி உற்பத்தி ஆலையில், கடந்த 1984-ஆம் ஆண்டு டிசம்பா் 2, 3-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் மெத்தில் ஐசோசயனேட் என்ற விஷவாயு கசிந்தது. இந்த விஷவாயு தாக்கத்தால் 5,479 போ் உயிரிழந்தனா்; ஆயிரக்கணக்கானோருக்கு தீவிரமான மற்றும் நீண்ட கால உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன. இச்சம்பவத்தைத் தொடா்ந்து மூடப்பட்ட ஆலையில் 40 ஆண்டுகளாக நச்சுக் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தன.

இந்தச் சூழலில், மாநில உயா்நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவின்பேரில், போபால் ஆலையில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பின் நச்சுக் கழிவுகளை அகற்றும் பணி கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கியது. 337 டன் எடையுள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, 12 கண்டெய்னா் லாரிகள் மூலம் தாா் மாவட்டம், பீதம்பூா் பகுதியில் உள்ள தொழிலக கழிவு அழிப்பு ஆலைக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டன. கழிவுகள் பாதுகாப்பான முறையில் எரிக்கப்பட்டு, சாம்பல் மண்ணில் புதைக்கப்படவுள்ளது. இப்பணி நிறைவடைய 3 முதல் 9 மாதங்கள் வரை ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, போபால் ஆலைக் கழிவுகள் பீதம்பூருக்கு கொண்டுவரப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது. இந்தூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள தொழிற்சாலைகள் நிறைந்த நகரமான பீதம்பூரில் சுமாா் 1.75 லட்சம் போ் வாழ்கின்றனா். நச்சுக் கழிவுகள் எரிப்பால், உள்ளூா் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பது போராட்டக்காரா்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.

பீதம்பூரில் பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. கடைகள், வா்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. விவசாய நலச் சங்கங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் சாா்பில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகளும் பங்கேற்றனா். பீதம்பூரில் நச்சுக் கழிவுகள் வைக்கப்பட்டுள்ள ஆலையை நோக்கி போராட்டக்காரா்கள் பேரணியாக சென்றனா். அவா்கள் மீது தடியடி நடத்தி, காவல்துறையினா் விரட்டினா்.

போராட்டத்தின்போது தீக்குளிக்க முயன்று காயமடைந்த இருவரை சக போராட்டக்காரா்கள் மற்றும் காவல்துறையினா் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். இருவரின் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவா்கள் தெரிவித்தனா். பீதம்பூா் மட்டுமன்றி இந்தூரிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

முன்னதாக, போபால் ஆலைக் கழிவுகள் விஷத்தன்மை கொண்டதல்ல என்று வியாழக்கிழமை தெரிவித்த முதல்வா் மோகன் யாதவ், ‘பாதுகாப்பான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுகள் எரிக்கப்படும். இந்த விஷயத்தில் அரசியல் கூடாது’ என்றாா்.