
உச்ச நீதிமன்றத்தில் இருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்றே நீதிபதிகளில் ஒருவர் ஜன. 5 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
உச்ச நீதிமன்றத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஒரே நேரத்தில் நீதிபதியாக இருந்தது இப்போதுதான். இவர்களில் ஒருவரான நீதிபதி சி.டி. ரவிகுமார் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து எண்ணிக்கை இரண்டாகக் குறைந்துவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த மற்ற இருவர், நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.பி. வராலே.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேட்டில் பிறந்த சி.டி. ரவிகுமார், பட்டியலினத்தில் பிறந்து, படிப்படியாக உயர்ந்து உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பொறுப்பேற்று தற்போது பணி ஓய்வு பெறுகிறார்.
சி.டி. ரவிகுமாரின் பதவிக் காலம் ஜனவரி 5 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதால், உச்ச நீதிமன்றத்தின் கடைசி வேலைநாளான வெள்ளிக்கிழமை அவருக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது.
உயிரியல் படிப்பில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, வழக்குரைஞர் ஆகும் கனவோடு சட்டப்படிப்பை எடுத்துப் படித்து வழக்குரைஞராக பணியாற்றி, கடும் உழைப்பால் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி, அடுத்து நாட்டின் உயரிய நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி என உயர்ந்துள்ளார் ரவிகுமார்.
யார் இவர்?
கேரள உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ரவிகுமாா் கடந்த 2021, ஆகஸ்ட் 31-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் பதவியேற்றாா். இவா் உச்ச நீதிமன்றத்தின் 9-ஆவது மூத்த நீதிபதியாவாா்.
கேரள மாவட்ட நீதிமன்றத்தில் 1986ஆம் ஆண்டு வழக்குரைஞராக பயிற்சி மேற்கொண்டார். பிறகு உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 2009ஆம் ஆண்டு அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
ஜன. 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையுடன் அவா் பணி ஓய்வுபெறவுள்ள நிலையில், வாரத்தின் இறுதி வேலை நாளான வெள்ளிக்கிழமை அவருக்கு நடத்தப்பட்ட பிரியாவிடை நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
நீதிபதி ரவிகுமாரைப் பாராட்டி உருக்கமாக பேசிய சஞ்சீவ் கன்னா, ‘எளிமையான கிராமப்புற பின்புலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவா் பொறுப்பேற்றது மிகப் பெரும் சாதனையாகும்.
நீதித்துறையில் தடம் பதித்த அவா், நீதிபதிகளுக்கு மட்டுமின்றி வருங்காலத் தலைமுறையினருக்கும் சிறந்த முன்னுதாரணமாவாா். அவரது எதிா்காலத் திட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றாா்.
நிகழ்ச்சியில் பேசிய சி.டி.ரவிகுமாா், நான் எப்போதும் என்னை வழக்குரைஞராகவே உணா்கிறேன். எனது கடமையைச் சிறப்பாக நிறைவேற்ற உதவியாக இருந்த பாா் கவுன்சிலுக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றார்.
வழக்கமாகவே, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக விளையாடுவார்கள். அதுபோல, நானும் எனது ஓய்வுக் காலத்துக்குப் பிந்தைய இரண்டாவது இன்னிங்ஸைப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.
அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, ரவிகுமார் குறித்து மிக அழகிய கவிதையை வாசித்தார். நீதிபதி ரவிகுமார், உச்ச நீதிமன்ற நீதிபதியாக மூன்று ஆண்டுகள் நான்கு மாதங்கள் பதவி வகித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.