சாதி அரசியலின் பெயரால் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்: பிரதமர் மோடி

கிராமீன் பாரத் மகோத்சவ் நிகழ்வை இன்று தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியவை.
நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி
நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி
Published on
Updated on
1 min read

நமது நாட்டில் சாதி அரசியலின் பெயரால் சிலர் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று கிராமீன் பாரத் மகோத்சவ் நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு இன்று முதல் ஜன. 9 வரை நடைபெறுகிறது. இதில் பேசிய அவர், “வருகிற 2024 ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் கனவை முன்னெடுப்பதில் கிராமங்கள் முக்கிய பங்கு வகிக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும், எவருடைய பெயரையும் குறிப்பிடாமல் பேசிய பிரதமர் மோடி, “நமது நாட்டின் அமைதியை சீர்குலைக்க சிலர் சாதியின் பெயரால் அரசியல் செய்து வருகின்றனர். அதனைத் தவிர்க்க கிராமங்களின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண நாம் பாடுபட வேண்டும்" எனக் கூறினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்துப் பேசிய மோடி, ஸ்டேட் பேங்க் ஆய்வறிக்கையின் படி 2012 ல் 26% ஆக இருந்த வறுமை சதவீதம் தற்போது 5% ஆக குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னரும் இந்திய கிராமங்களுக்கான அடிப்படை தேவைகள் எதையும் செய்து தராத முந்தைய அரசாங்கங்களைப் போல இல்லாமல், தமது அரசு கிராமங்களை முன்னேற்றவும், அவர்களுக்கான ஒட்டுமொத்தத் தேவைகள் குறித்தும் சிந்திப்பதாக பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்வில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, பிஎம் முத்ரா, பிஎம் சுவநிதி உள்பட மத்திய அரசின் 16 திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மகோத்சவம் நிகழ்வு பல்வேறு விவாதங்கள், கருத்தரங்கம் மற்றும் கற்றல் நிகழ்வுகள் மூலம் கிராமப்புற அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் சுயாதீன பொருளாதார வளங்களை உருவாக்கவும் கிராமங்களில் புதுமையை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி பொருளாதார நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் ஊக்குவித்து, குறிப்பாக வடகிழக்கு இந்தியாவில் பொருளாதாரத்தை மேம்படுத்தி நிலையான விவசாய நடைமுறைகளை ஆதரிப்பதையும் இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.