விண்வெளியில் தாவர வளர்ப்பு சோதனை முயற்சியில், விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
மேலும், முளைவிட்ட காராமணியில், விரைவில் இலைகள் வளருமென எதிர்பார்க்கப்படுவதாகவும், முதலில் ஏழு நாள்களுக்குள் விதை முளைவிடுமென விஞ்ஞானிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆச்சரியமடையும் வகையில் நான்கு நாள்களில் காராமணி விதை முளைத்திருப்பதாகவும் இஸ்ரோ கூறியிருக்கிறது.
விண்வெளியில் வேளாண்மை செய்ய முடியுமா என்பதை ஆராயும் வகையிலும், வருங்காலத்தில் விண்வெளியில் வேளாண் சூழலை ஏற்படுத்துவதற்கான முன் முயற்சியாகவும் இந்த சோதனையை இஸ்ரோ மேற்கொண்டு முதல்கட்ட வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது.
விண்வெளியில் செடி வளர்ப்புக்கான பரிசோதனை முயற்சி (CROPS)யாக, பிஎஸ்எல்வி-சி60 மூலம் ஏவப்பட்ட 24 செயற்கைக்கோள்களில் விஎஸ்எஸ்சி துணை செயற்கைக் கோளும் ஒன்று.
அதாவது, பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 24 சிறிய செயற்கைக்கோள்களில் CROPS எனப்படும் விஎஸ்எஸ்சி துணை செயற்கைக் கோளில், நுண் புவியீர்ப்புச் சூழலில் காராமணி விதைகள் வைத்து அனுப்பப்பட்டது. விண்வெளியில் அதன் வளர்ச்சியை ஐந்து முதல் ஏழு நாள்களுக்கு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலயில், மாத்திரை போல நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு காராமணி விதைகளைக் கொண்டிருக்கும் அந்த பெட்டகத்திலிருந்து ஒரு காராமணி விதை முளைவிட்டிருக்கும் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.
ஸ்பேடெக்ஸ் திட்டம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆயவு மையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் டிசம்பர் 30ஆம் தேதி செலுத்தப்பட்டது.
இதையும் படிக்க.. விண்வெளி செடி வளர்ப்பு சோதனை: காராமணி தேர்வு செய்யப்பட்டது ஏன்?
இந்திய ஆய்வு மையத்தை 2035ஆம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்படி, விண்ணுக்கு ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என 2 விண்கலன்களை தனியார் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ வடிவமைத்து அனுப்பியிருக்கிறது. பிறகு, இந்த விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.