பனிமூட்டம் காரணமாக தில்லி நெடுஞ்சாலையில் 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.
தலைநகர் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாததால் பகல் பொழுதிலும் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.
இந்த நிலையில் பனிமூட்டம் காரணமாக தில்லி நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதின. இந்த சம்பவங்களில் 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, மொராதாபாத்தில் இருந்து தில்லி நோக்கிச் சென்ற கார், ஹபூரின் பாபுகர் பகுதியில் முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதியது.
இந்த விபத்தில் கார் ஓட்டுநர் இம்ரான் மற்றும் அவரது மனைவி ஹீனா ஆகியோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து 7 வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. நிகழ்விடத்துக்கு வந்த காவலர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பழுதடைந்த வாகனங்கள் கிரேன் உதவியுடன் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.